Published Date: October 26, 2024
CATEGORY: CONSTITUENCY

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் முழுவதிலும் நேற்று மதியம் முதல் மாலை வரை மூன்று மணி நேரத்திற்கு மேலாக திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் வெளியேறினர். மாநகரின் பிரதான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் மதுரை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
குறிப்பாக, கோரிப்பாளையம் அருகே வைகை ஆற்றங்கரை பகுதி, குலமங்கலம் சாலை பகுதி, செல்லூர் கண்மாய் மறுகால் பாயும் கால்வாய் பகுதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்: மதுரை விவசாயம் சார்ந்த மாவட்டம். பண்டைய நீர் மேலாண்மை முறையில் கண்மாய் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பொழிய வேண்டிய வடகிழக்கு பருவமழை மிக முன்னதாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே மதுரை மாநகரில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துள்ளது.
இதனால் மதுரையில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்மாய்கள் பரவலாக நிரம்பியுள்ளன. கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் இறுதியாக பந்தல்குடி கால்வாய் வழியாக செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆற்றிற்கு செல்கிறது.
இதில் சில இடங்களில் கால்வாய்களின் கொள்ளளவை விட அதிகமாக நீர் செல்வதால் சில பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறை பணியாளர்கள் களத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்லூர் கண்மாயிலிருந்து கூடுதலாக தற்காலிக கால்வாய் அமைத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Media: TAMIL.SAMAYAM.COM